செவ்வாய், 27 நவம்பர், 2012

Torture for 13 year girl : சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!



     தளசேரி : கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அவளது தந்தை, சகோதரன் மற்றும் மாமா ஆகியோரால் 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளான செயல் அம்மாநிலத்தை பதை பதைக்க வைத்துள்ளது.

     பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உள்ளூர் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் பள்ளி முடிவடைந்த பின்னரும்,அந்த சிறுமி வீட்டிற்கு செல்ல மறுத்து அழுது கொண்டிருந்திருக்கிறாள்.

     இது குறித்து அவளது வகுப்பு ஆசிரியை கேட்டபோது, 6-ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்து தனக்கு நேர்ந்து வரும் கொடுமையை சொல்லி அச்சிறுமி கதறி அழுதுள்ளாள்.


     அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை, இதுபற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்தே, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரை தொடர்ந்து அச்சிறுமியின் தந்தை, 15 வயது சகோதரன் மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


     அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில், தந்தை மற்றும் மாமா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட அச்சிறுமி மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலையும் இவ்வழக்கை விசாரிக்கும் போலீசாரிடம் தெரிவித்துள்ளாள்.


     அது 8-ஆம் வகுப்பு படித்துவந்த அவளது மூத்த சகோதரியும் இதே போன்று தனது குடும்ப உறுப்பினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2 வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான்! இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கேரள மாநில வனிதா ஆணையத்தின் தலைவர் கே. ரோசாக்குட்டி, இது கேரளாவின் மனசாட்சிக்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறியுள்ளார்.

     மேலும் மூத்த சகோதரி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது காவல் துறையின் பார்வை என்றும், இது குறித்து சரியாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும்,எனவே மீண்டும் அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


     நமது சமுதாயம் எங்கே போகிறது?

நன்றி : ஜூனியர் விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக