செவ்வாய், 24 ஜூலை, 2012

தூங்காமல அவதிப் படுகிறீர்களா!


     இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு. சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.

     30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

     அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். 

     தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம். மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும்போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. 

     குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும். 

     பாதுகாப்பு முறை : தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும். தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும். 

     தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். 

     இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும். மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும். புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும். 

உணவு வகைகள் :

     ஓட்ஸ் சூப் : ஒரு கப் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், வெண்ணெய் 2 டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், பச்சை பிரியாணி இலை சிறிதளவு, பால் இரண்டு கப், பூண்டு இரண்டு பல் எடுத்துக் கொள்ளவும். சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறிய ஒரு கப் ஓட்சை மசித்துக் கொள்ளவும். அதில் இரண்டு கப் பால் ஊற்றி கொதிக்க விடவும். 

     வாணலியில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, பட்டை, பிரியாணி இலை, குடைமிளகாய் ஆகியவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். ஓட்ஸ் உடன் சேர்த்து இறுதியில் வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக அருந்தலாம். ஓட்ஸ் சேர்ப்பதால் செரோட்டின் சுரப்பு அதிகரிக்கும்.

     முருங்கைக்காய் பிரைடு ரைஸ் : முருங்கைக்காய்களை வேக வைத்து அதன் சதை பகுதியை ஒரு கப் அளவுக்கு சேகரிக்கவும். இரண்டு வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து 1 கப் எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன், மிக்சியில் அடித்த தக்காளி கால்கப், ஒரு கப் பாசுமதி அரிசி எடுத்துக் கொள்ளவும். 

     பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு, புதினா கொத்தமல்லி ஒரு கப், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், நெய் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை வதக்கிய பின்னர் காய்கறிகள் சேர்த்து வதக்கி, அரிசியுடன் இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து குக்கரில் இரண்டு விசில் விடவும். கடைசியில் முருங்கைக்காய் விழுது, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

     கிரீம் புரூட் சாலட் : புளிக்காத தயிர் ஒரு கப் எடுத்து துணியில் கட்டி இரண்டு மணி நேரம் தொங்க விடவும். தண்ணீர் வடிந்து கிரீம் மட்டும் மிச்சம் இருக்கும். ஆப்பிள், அன்னாசி, திராட்சை, பப்பாளி, மாதுளை, கொய்யா ஆகியவற்றை பொடியாக நறுக்கி இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். இதில் கால் கப் தேன் சேர்க்கவும். மிளகுத்தூள் அரை டீஸ்பூன், தயிரில் இருந்து சேகரித்த கிரீம் சேர்த்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம். மினரல், வைட்டமின் சத்துக்கள் கிடைக்கிறது.

உணவுக்கட்டுப்பாடு :

     பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும். அடிக்கடி குளிர்பானம் குடிக்கும் பழக்கத்தை கைவிடவும். அடிக்கடி காபி குடிப்பதை நிறுத்தவும். பழங்களை அப்படியே சாப்பிடலாம். மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். 

     இரவு நேரத்தில் அரிசி மற்றும் ரவை, ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும். இரவில் தினமும் பால் சேர்க்கலாம். ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய ஐந்து பழங்களும் தூக்கத்துக்கு நல்லது. இவற்றை பழக்கலவை செய்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தூக்கம் பெறலாம். 

     தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை கட்டாயம் இருக்க வேண்டும். முளைகட்டிய பயறு வகை ஒன்றும் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்காய்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும். தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்கவும். 

     கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்ளலாம். இத்துடன் ஏதாவது ஒரு காய் பொரியல் சேர்த்துக் கொள்ளும் போது நார்ச்சத்துடன் மற்ற வைட்டமின் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் தூக்கம் இன்மை பிரச்னையை விரட்டலாம்.

நம்ம வீட்டு வைத்தியம் :

* வெண்தாமரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும். 

* ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும். 

* முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும். 

* மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும். 

* மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும். 

* மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத்தில் தினமும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். 

* மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும். 

* 20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

* இவை அனைத்தையும் கடைபிடித்தாலும் தூக்கம் வராவிட்டாலும் கவலைப் படாதீர்கள். நம்முடைய உடலுக்கு நான்கு மணி நேர ஒய்வு போதும். படுக்கையில் படுத்து முதல் ஒரு மணி நேரத்திற்கு வலது, இடது என புரண்டு புரண்டு படுப்போம். அன்று நாம் செய்த செயல்களின் நினைவுகள் வந்து வந்து போகும். 

     அது நம் மனது அல்லது மூளை அன்றைய தின நிகழ்வுகளை அலசிப் பார்க்கிறது. ஆகவே தூங்கவில்லையே என்று பயப்படாமல் அடுத்த நாள் நாம் செய்து முடிக்கவேண்டிய வேலைகளை பட்டியல் இடுங்கள். சிறிது நேரத்தில் நம்மை அறியாமல் தூங்கி விடுவோம். தினமும் தூக்கம் வருவதில்லையே என்று கவலைப்பட்டால் அதுவே உங்களுக்கு வியாதிகள் வரக்காரணம் ஆகிவிடும்.   விழித்திருப்போம். தூங்குவோம்.

நன்றி : தமிழ்முரசு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக