திங்கள், 9 ஜூலை, 2012

பரம்பரை பழக்கத்தை சரியாக கடைபிடியுங்கள்


     ""எங்க முப்பாட்டனார் காலத்தில் இருந்தே இந்த பூஜையை நாங்கள் செய்து வருகிறோம். எங்க தாத்தா, அப்பா, மாமா... இவர்களெல்லாம் இதை அப்படி செய்வார்கள், இப்படி செய்வார்கள்,'' என்று பரம்பரை கவுரவம் பேசுவோர் உண்டு.

     தாத்தாக்களும், அப்பாவும் எந்தளவுக்கு அதைப் பக்தியோடு முறையாகச் செய்தார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அந்த பக்தி சற்றும் குறையாமல் பூஜை செய்தால் தான் நல்லது.

     ஒரு பெரியவர், பகவானுக்கு தினமும் மதியம் படைக்க வேண்டிய நெய் பதார்த்தத்தை தயார் செய்து ஒரு தட்டில் வைத்திருப்பார். ஒரு பூனை இதை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தது. இவர் பதார்த்தம் செய்து பூஜை அறையில் வைக்கும் நேரம் அதற்கு தெரியும். வேகமாக உள்ளே வந்து, கவ்விக்கொண்டு ஓடிவிடும். இதை ஒருநாள் கவனித்து விட்டார் பெரியவர். ஒருநாள் பூனையை அடித்தே தீருவதென முடிவெடுத்து, கம்புடன் காத்திருந்தார்.

     பூனை வந்தது, பொருளைக் கவ்வியது. இவர் கம்புடன் பாய்ந்தார். அது சிட்டாய் பறந்துவிட்டது. இப்படியாக, தினமும் அது நேரத்துக்கு வர, இவர் கம்புடன் விரட்ட, வேறு பலகாரத்தை அவர் நைவேத்யம் செய்வார். இதைக் கவனித்துக் கொண்டே இருந்தான் அவரது மகன். ஒருநாள் பெரியவர் இறந்துவிட்டார்.

     அப்பா செய்த பூஜையை பிள்ளை செய்ய ஆரம்பித்தான். இவனுக்கு அப்பா ஏன் பூனையை விரட்டினார் என்று தெரியாது. பண்டத்தை எடுக்கத் தான் அது உள்ளே வந்துபோனது என்று அறியும் ஆற்றல் கூட இவனிடம் இல்லை. தினமும் 12 மணிக்கு பண்டத்தை வைத்து விட்டு கம்புடன் உட்கார்ந்து இருப்பான். பூனை வரும். இவன் வாசல் வரை விரட்டுவான். 

     ஒருநாள் ஒரு பெரியவர் வந்தார். ""பூனையை ஏண்டாவிரட்டுறே!'' என்றார். பண்டத்தை எடுக்க வந்ததால் விரட்டினேன் என்று இவன் சொல்லவில்லை. ""எங்க அப்பா இதே நேரத்தில் தினமும் விரட்டினார். நானும் விரட்டுகிறேன்,'' என்று பதில் சொன்னான். ஆக அப்பா பூனையை விரட்டியதை ஒரு சடங்காகவே நினைத்து செய்ய ஆரம்பித்து விட்டான். முன்னோர் செய்த சடங்கைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு சரியாகச் செய்ய வேண்டும். புரிகிறதா!



நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக