சனி, 20 ஜூலை, 2013

ASTROLOGY - 46 : பஞ்சாங்கம்


     பஞ்சாங்கம் எனும் சொல் எல்லோராலும் நன்கு அறியப்பட்டதே. இதன் பொருளை அறிந்தோ அறியாமலோ பலர் இச்சொல்லை உபயோகிக்கின்றனர். எடுத்துக்காட்டாக 'பழைய பஞ்சாங்கம்' 'அபத்த பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்' என்றெல்லாம் கூறுவர். இச்சொல்லின் பொருள் என்ன?

     பஞ்ச எனும் சொல்லுக்கு ஐந்து என்று பொருள். 'பஞ்சவடி' எனும் சொல்லில், வட என்பதற்கு ஆலமரம் என்று பொருள். ஐந்து ஆலமரங்களின் தொகுப்பே பஞ்சவடியாகும். இவ்வாறே 'ஆப' என்பதற்கு நீர் என்று பொருள். ஐந்து நதிகளால் சிறந்து விளங்குவதால் 'பஞ்சாப்' என்று புகழப்படுகிறது. அவ்வாறே பஞ்சாங்கம் என்பதற்கு ஐந்து அங்கங்களைக் கொண்டது என்பது பொருளாகும்.

    இந்த ஐந்து அங்கங்கள் முறையே 1. திதி, 2. வாரம், 3. நட்சத்திரம், 4. யோகம், 5.கரணம் ஆகும். இந்த ஐந்து அங்கங்களுக்குள் முதலாவதான திதியைப் பார்ப்போம். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள தூரமாகும். இந்தத் திதிகள் சுக்கில பட்சம், கிருஷ்ண பட்சம் என்று இரண்டு வகைப்படுத்தியுள்ளார்கள்.

     சுக்கில எனும் ஸ்ம்ஸ்க்ருத சொல்லுக்கு வெண்மை என்றும் கிருஷ்ண எனும் ஸ்ம்ஸ்க்ருத சொல்லுக்கு கருமை என்றும் பொருளாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகை, கலையில் இருப்பது அமாவாசை ஆகும். சூரியனுக்கு பாகை 180-ல் சந்திரன் இருந்தால் பௌர்ணமி ஆகும். எனவே சூரியனிடமிருந்து நகர்ந்து செல்லச் செல்ல சந்திரனின் பிறை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகக் கண்ணுக்குத் தெரியவரும். 

     இவ்வாறு தினமும் வளர்ந்து வருவதால் வளர்பிறைக் காலம் என்பர். பௌர்ணமி அல்லது பூர்ணிமைக்குப் பின் முழு மதியிலிருந்து தினம் கொஞ்சம் கொஞ்சம் குறைவுபட்டுத் தெரியவரும். இவ்வாறு தேய்வதால் இதைத் தேய்பிறைக்காலம் என்பர். இவ்வாறு வளர்பிறைக் காலம் பதினைந்து நாட்களும், தேய்பிறைக் காலம் பதினைந்து நாட்களும் கொண்டது ஒரு மாதமாகும். அவைகளின் பெயர்கள் முறையே கீழ்க்கண்டவாறு ஆகும்.

    1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. ஷஷ்டி, 7. சப்தமி,  8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தி, 15. பௌர்ணமி அல்லது அமாவாசை. 



இவைகளின் தன்மைகளை விரிவாகக் காண்போம் :

1. சோதிடவியலில் திதி சுக்கில பிரதமையின் தன்மை :

    பிரதமை திதி தேவதையின் நிறம்           : சிவப்பு 
    பிரதமை திதி தேவதையின் கைகள்        : இரண்டு கைகள் 
    பிரதமை திதி தேவதையின் ஆயுதம்      : சக்தி, பாத்திரம் 
    பிரதமை திதி தேவதையின் வாகனம்     : ஆடு 
    பிரதமை திதியின் அபிமான தேவதை    : அக்கினி 
    பிரதமை திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 18 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                   4 நாழிகைகள்.

    பிரதமை திதியில் பிறந்தவர்களின் குணம் : செல்வந்தன், புண்ணியச் செயல்களில் ஈடுபாடு மிக்கவன்.

    பிரதமை திதியில் செய்யத்தக்கவைகள் : உலோகம், கருங்கல், மரம் இவைகளில் சித்திர வேலைகள், பாய் முடைதல், சித்திரங்கள் வரைதல், போர்க்கருவிகள் செய்தல் முதலியன.



2. சோதிடவியலில் திதி சுக்கில துவிதியையின் தன்மை :

    துவிதியை திதி தேவதையின் நிறம்           : வெண்மை  
    துவிதியை திதி தேவதையின் கைகள்        : கையில் வெள்ளைநிற புத்தகம் 
    துவிதியை திதி தேவதையின் வாகனம்     : அன்னம்  
    துவிதியை திதியின் அபிமான தேவதை    : துவஷ்டா  
    துவிதியை திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 14 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                     4 நாழிகைகள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணம் : துக்கமற்றவன், கவிஞன், அழகன், காமம் மிகுந்தவன், கலகம் செய்வதில் ஈடுபாடுடையவன், நாற்கால் பிராணிகள், தானியங்கள் மிக்கவன்.

    துவிதியை திதியில் செய்யத்தக்கவைகள் : முஞ்சிப்புல்லாலே செய்யக்கூடிய வேலைகள், திருமணம், யாத்திரை, தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், ஆபரணங்கள் செய்தல், வீடு கட்டுவது முதலியன.



3. சோதிடவியலில் திதி சுக்கில திருதியையின் தன்மை :

    திருதியை திதி தேவதையின் நிறம்           : வெண்மை  
    திருதியை திதி தேவதையின் ஆயுதம்      : சூலம், பாத்திரம்  
    திருதியை திதி தேவதையின் வாகனம்     : காளை  
    திருதியை திதியின் அபிமான தேவதை    : கெளரி  
    திருதியை திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 13 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                     4 நாழிகைகள்.

    திருதியை திதியில் பிறந்தவர்களின் குணம் : தவத்தில் ஈடுபாடுடையவன், செல்வந்தன், நற்செயல்கள் புரிபவன், அழகன், நல்ல அறிவாளி.

    திருதியை திதியில் செய்யத்தக்கவைகள் : சங்கீதம், இசைக்கருவிகள் மற்றும் ஓவியம் பயிலுதல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல் முதலியன. 



4. சோதிடவியலில் திதி சுக்கில சதுர்த்தியின் தன்மை :

    சதுர்த்தி திதி தேவதையின் நிறம்           : நீலோத்பல நிறம் 
    சதுர்த்தி திதி தேவதையின் ஆயுதம்      : மழு, பாத்திரம்  
    சதுர்த்தி திதி தேவதையின் ஆடை         : பீதாம்பரம்  
    சதுர்த்தி திதி தேவதையின் இருப்பிடம் : பொன் ஆசனம், ஊமத்தம்பூ  
    சதுர்த்தி திதியின் அபிமான தேவதை    : கணபதி 
    சதுர்த்தி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 30 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                   4 நாழிகைகள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் குணம் : வருந்தத்தக்க செயல்கள் புரிபவன், நன்னடத்தையற்றவன், பழுதான நகங்களை உடையவன், மந்திர தந்திரமறிந்தவன், முரடன். 

    சதுர்த்தி திதியில் செய்யத்தக்கவைகள் : எதிரியை அழித்தல், எதிரிகளைக் கட்டுப்படுத்துவது, ஆயுதப்பயிற்சி, விஷப்பிரயோகம், எரியூட்டுதல் முதலியன. மங்கள காரியங்கள் செய்தால் ஒருமாத காலத்தில் அழிவைக் காணும்.



5. சோதிடவியலில் திதி சுக்கில பஞ்சமியின் தன்மை :

    பஞ்சமி திதி தேவதையின் நிறம்             : பவழ நிறம்
    பஞ்சமி திதி தேவதையின் கைகள்          : ஞான முத்திரையுடன் கூடியது   
    பஞ்சமி திதி தேவதையின் ஆபரணம்     : கழுத்து, தலையில் ஆபரணம்   
    பஞ்சமி திதி தேவதையின் ஆயுதம்        : சங்கம், பாத்திரம்   
    பஞ்சமி திதி தேவதையின் இருப்பிடம்   : தாமரை மலர்   
    பஞ்சமி திதியின் அபிமான தேவதை      : ஸர்ப்பம் 
    பஞ்சமி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 24 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                   4 நாழிகைகள்.

    பஞ்சமி திதியில் பிறந்தவர்களின் குணம் : அழகானவன், அதிக காமமுடையவன், கலைகளைக் கற்றவன், பொறுமை மிக்கவன், தன்னை நாடியவர்களிடத்து அன்புடையவன், கவிஞன், கருணையால் புகழ் பெறுவான்.

    பஞ்சமி திதியில் செய்யத்தக்கவைகள் : யாத்திரை, உபநயனம், திருமணம், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், சாந்தி கருமங்கள், பஞ்சமியில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் வெகுகாலம் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக