புதன், 8 ஆகஸ்ட், 2012

கல்வி, செல்வம், வீரம்.



     லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி.

வாணீம் ஜிதஸுகவாணீமளிகுல
வேணீம் பவாம்புதித்ரோணீம்
வீணாஸுகஸிஸுபாணீம்
நதகீர்வாணீம் நமாமி ஸர்வாணீம்



     வேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.


குவலயதளநீலாங்கீம் குவலயரக்ஷைக தீக்ஷிதாபாங்கீம்
லோசனவிஜித குரங்கீம் மாதங்கீம் நமாமி ஸங்கரார்தாங்கீம்


     நீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.

கமலாகமலஜகாந்தா கரஸாரஸ
தத்தகாந்த கரகமலாம்
கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
கமலாங்கசூட ஸகலகலாம்
  


     லட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.


ஸுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்
முகுந்தநிதிஸதனாம்
கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுஸலாயா
ஸுரேஷு க்ருதகதனாம்


     அழகிய சந்திரன் போன்ற முகத்தையுடையவளே, மலர் மொக்கு போல் அழகிய பற்களையுடையவளே, ஒன்பது நிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளே, மன்மதனைக் கருணையினால் உயிர்ப்பித்தவளே, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை வதைத்தவளே, பராசக்தியே நமஸ்காரம்.


துங்கஸ்தனஜிதகும்பாம் க்ருதபரிரம்பாம்
ஸிவேன குஹடிம்பாம்
தாரிதஸும்பநிஸும்பாம் நர்த்திதரம்பாம்
புரோ விகததம்பாம்


     உன்னதமான ஸ்தனங்களினால் அழகிய குடத்தையே பழிப்பவளே, பரமசிவனால் அணைத்து கொள்ளப்பட்டவளே, ஸ்கந்தனைக் குழந்தையாக அடைந்தவளே, சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை வதம் செய்தவளே, எதிரே ரம்பை நடனமாட, அழகிய சபையைக் கொண்டவளே, அகங்காரமற்றவளே, பராசக்தியே நமஸ்காரம்.

அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
கமனவிஜிதகாதம்பாம்
பாலிதஸுஜனகதம்பாம் ப்ருதுல
நிதம்பாம் பஜே ஸஹோரம்பாம்



     கோவைப்பழத்தையே மயக்கும் சிவந்த கீழுதடை உடையவளே, உலகங்களுக்கு மாதாவாகத் திகழ்பவளே, நளினமான நடையினால் அன்னத்தையே வென்றவளே, பக்தர்களின் சமூகத்தைக் காப்பாற்றுபவளே, பெரிதான பின்பாகத்தையுடையவளே, கணபதியுடன் சேர்ந்திருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

ஸரணாகத ஜனபரணாம் கருணா
வருணாலயாம் நவாவரணாம்
மணிமயதிவ்யாபரணாம் சரணாம்
போஜாதஸே வகோத்தரணாம்


     சரணமடைந்த ஜனங்களை ரக்ஷிப்பவளே, கருணைக் கடலாய் விளங்குபவளே, ஒளி மிகுந்த மணிகளை அணிகலன்களாக சூடியவளே! பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை ஆபத்தினின்றும் எந்நாளும் காப்பவளே, நமஸ்காரம்.


நதஜன ரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்
ப்ரத்யக்ஷதைவதா த்யக்ஷாம்
வாஹீக்ருத ஹர்யக்ஷாம்
க்ஷபிதவிபக்ஷாம் ஸுரேஷு க்ருதரக்ஷாம்


     நமஸ்கரித்த ஜனங்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளே, சாமர்த்தியமுள்ளவளே, பிரத்யக்ஷமான சூரியன் முதலிய தேவதைகளுக்கும் தேவதையாயிருப்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே, சத்ருக்களை வதம் செய்தவளே, தேவர்களைக் காத்தவளே நமஸ்காரம்.

தன்யாம் ஸுராவரமான்யாம் ஹிமகிரி
கன்யாம் த்ரிலோகமூர்தன்யாம்
விஹ்ருத ஸுரத்ருமவன்யாம் வேத்மி

வினாத்வாம் ந தேவதாஸ்வன்யாம்

     பாக்கியமுள்ளவளே, தேவ சிரேஷ்டர்களால் பூஜிக்கப்படுபவளே, இமயமலையின் மகளே, மூன்று உலகிலும் சிறந்தவளே, மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்களடங்கிய தோட்டத்தில் விளையாடுபவளே, நமஸ்காரம்.

ஏதாம் நவமணிமாலாம் படந்தி
பக்த்யேஹ யே பராஸக்த்யா:
தேஷாம் வதனே ஸதனே ந்ருத்யதி
வாணீ ரமா ச பரம முதா

     பராசக்தியின் இந்த நவமணிமாலை ஸ்தோத்திரத்தை பக்தியுடன் யார் படிக்கிறாரோ, அவரது வாக்கில் சரஸ்வதியும் இல்லத்தில் மகாலட்சுமியும் மிக்க சந்தோஷத்துடன் ஆனந்த நடனம் ஆடுகிறார்கள்.

பாதய வா பாதாளே ஸ்தாபய வா
ஸகலபுவன ஸாம்ராஜ்யே
மாதஸ்தவ பதயுகளம் நாஹம்
முஞ்சாமி நைவ முஞ்சாமி

     ஓ, எனக்குத் தாயான பராசக்தியே, தாங்கள் என்னை பாதாளத்தில் தள்ளினாலும் சரி, அல்லது எல்லா உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாகச் செய்தாலும் சரி, தங்களது இரண்டு பாதங்களையும் நான் விடமாட்டேன். விடவே மாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக