ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மினுமினுப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?


     உங்களைப் பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ என சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

     சாப்பிடும்போதும், கைக்கு சம்பளப் பணம் வரும்போதும், செக்ஸின்போதும் மூளைக்குள் உற்சாகத்தை உருவாக்கும் ஏரியா தூண்டப்படுகிறது. ஒருவர் தன்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லும்போதும் அதே ஏரியா தூண்டுதலுக்கு ஆளாகிறதாம். எனவே உற்சாகம் ஊற்றெடுக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழக நியூரோ துறை விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


     நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குப் போகிறவர்களுக்கு இதயநோய் உட்பட எல்லா நோய்களும் சீக்கிரமே வரும் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இவர்கள் பயணத்திலேயே பாதி ஆயுசைக் கழிப்பதால் ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய மாட்டார்கள், தூங்கவும் மாட்டார்கள். நிம்மதியாக சாப்பிடவும் மாட்டார்கள். இதனால் எல்லா நோய்களும் 'ஹாய்’ சொல்கின்றன. அதிலும் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் ஆபீஸ் இருந்தால், ரிஸ்க் இன்னும் அதிகமாம்!

     ‘உடல் மினுமினுப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்று நினைக்கும் பெண்ணா நீங்கள்? ‘நிறைய பழங்களும் காய்களும் சாப்பிடுங்கள். ஆறே வாரங்களில் மினுமினுப்பு கியாரண்டி’ என்கிறது ஸ்காட்லாந்து ஆய்வு ஒன்று. காய்கறிகள், பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கும் கரோட்டினாய்டுகளும் தாவர வேதிப் பொருட்களும் நம் உடலில் மாயாஜாலங்கள் செய்கின்றன. விளைவு, பொலிவும் கவர்ச்சியும்!


     குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் இளம்பெண்கள் பற்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் எப்படி போடுகிறார்கள் முடிச்சு? 1956 இளம்பெண்களிடம் நடத்திய ஆய்வில், பற்களில் சொத்தை இல்லாதவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறந்ததாம்! சொத்தைப் பல்லும் பல்வலியுமாகத் துடித்தவர்கள் லேட்டாகத்தான் கர்ப்பம் ஆனார்களாம்! வாய்க்குள் வளரும் பாக்டீரியாக்கள் கர்ப்பத்தை பாதிக்கும் வேலையைச் செய்கின்றன.

     தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருந்தபடி வேலை பார்க்கிறவர்கள், சீக்கிரமே மரணத்தை சந்திக்கும் துர்பாக்கியசாலிகளாக இருப்பார்களாம்! ஆஸ்திரேலியாவில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 497 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வு இதை உறுதி செய்கிறது. 


     நீண்ட நேரம் உட்கார்ந்தபடி இருப்பது, உடலின் இயக்கத்தை தாறுமாறாக்கி, சகல உறுப்புகளையும் பாதிக்கிறது. கொழுப்பு அதிகம் சேர்கிறது. இதனால் இதயம் பாதிப்புக்கு ஆளாகிறது! 


     ‘காலை டிபனில் எந்த வடிவத்தில் முட்டை சாப்பிட்டாலும் பிரச்னைதான்’ என்கிறது ஐரோப்பிய குண்டு ஆசாமிகள் சங்கம் நடத்திய ஆய்வு ஒன்று! பசியைத் தூண்டும் ஹார்மோன்களை இது அடக்கிவைத்து, மதியம் சரியாக சாப்பிடவிடாமல் தடுக்கிறது. விளைவாக, மாலையில் நொறுக்குத்தீனியை வெட்ட நேர்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக