ஞாயிறு, 15 ஜூலை, 2012

சாமியார் ஆனார் தமிழ் பட ஹீரோயின்



     தமிழ் நடிகை தனுஸ்ரீ தத்தா திடீர் சாமியார் ஆனார். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. 10 வருடம் இந்தி சினிமாவில் நடித்ததில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த தத்தா, திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு சாமியார் ஆகிவிட்டார்.

     பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்களுக்கு புறப்பட்டு சென்றார். இது பற்றி அவர் கூறியதாவது : என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 வருடம் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் இந்த அனுபவம் என்னை நோகடித்து விட்டது. 

     பாலிவுட்டில் என் மீது தரப்பட்ட அழுத்தங்கள், இரக்கமற்ற மனிதர்கள், இதயத்தை உடைத்தவர்கள், ஊக்கம் தருவதற்கான நண்பர்கள் யாரும் இல்லாதது என பல்வேறு சோதனைகள். இவையெல்லாம் ஒரு கட்டத்தில் என் மனதை வெடித்து சிதறவைத்தது. அன்றைய தினம்தான் நடிப்பிலிருந்து இடைவெளி எடுக்க முடிவு செய்தேன்.

     இந்த இடைவெளியில் என்னை நானே சுயசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒரு மாதத்துக்கு முன்புதான் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் ஒரு குறை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. 

     காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனவே லடாக் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே என் தலைமுடியை மொட்டை அடித்துவிட்டேன். இதற்கு காரணம் என்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான். 

     இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார். சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு இந்த வாரம் அவர் மும்பை திரும்பினார். தொடர்ந்து ஆன்மிகத்தில் மூழ்க அவர் முடிவு செய்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவின் இந்த முடிவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக