ஞாயிறு, 8 ஜூலை, 2012

கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி : மின்சார வாரியத்துக்கு 4000 உதவியாளர் நியமனம் - ஜெயலலிதா


     முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

     ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு அடித்தளமாக விளங்குவது மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.  இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்து, அனுப்புகை மற்றும் பகிர்மானம் ஆகியவற்றை சீரிய முறையில் மேற்கொண்டு மின் பயனீட்டாளர்களுக்கு தரமான மின்சாரத்தை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.

     இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு மின்சார வாரியம் 2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக நெருக்கடியில் சிக்கித் தவித்தது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்தை நெருக்கடியிலிருந்து மீட்டு, முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான முனைப்பான நடவடிக்கைகளை எடுத்தேன்.  

     தமிழ்நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம், ஆமை வேகத்தில் நடைபெற்றிருந்த 1000 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டம், 1,200 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டம், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டதையடுத்து, இந்தத் திட்டங்கள் எல்லாம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன. 

     இது மட்டுமல்லாமல், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் ஏற்பட்ட பிரச்சனையை விவேகத்துடன் எனது தலைமையிலான அரசு கையாண்டதன் காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையமும் விரைவில் உற்பத்தியை துவங்க உள்ளது. 

     தமிழ்நாடு மின்சார வாரியம் மக்கள் சேவையினை விரைந்து மேற்கொள்ளும் வகையில், தற்போது காலியாக உள்ள 4,000 கள உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரடியாக நியமனம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.  

     இவ்வாறு, கள உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு 3,250 ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். இரண்டு ஆண்டு கால பயிற்சி முடிவடைந்தவுடன், அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, அவர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் வழங்கப்படும்.  

     இதன் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மேலும் அதிகரித்து, மின் பயனீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சேவை அளிக்கவும் வழிவகை ஏற்படும் என்பதையும், மின்மிகை மாநிலம் என்ற பெருமையை  தமிழகம் மீண்டும் எய்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக