திங்கள், 9 ஜூலை, 2012

சோதனை ஓட்டத்தில் பஜாஜ் பாக்ஸர் 100 சிசி பைக்


     இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருப்பது, பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இந்த நிறுவனம், இந்திய கிராமங்களுக்காக, கரடு முரடான சாலைகளில் செல்லவும், சுமைகளை ஏற்றிச் செல்லவும் வசதியாக, பஜாஜ் பாக்ஸர் பிஎம்150 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. எனினும், இதன் விற்பனை பெரிய அளவில் இல்லை.

     இந்த சூழ்நிலையில், பஜாஜ் பாக்ஸர் பிஎம்100 என்ற பைக்கின், சோதனை ஓட்டம் நடநது வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. 100 சிசி பைக் என்பது, என்ட்ரி லெவல் பைக் பிரிவை சேர்ந்தது. இந்தியாவில், அதிக பைக்குகள் விற்பனையாவது, இந்த பிரிவில் தான். பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏற்கனவே, இந்த பிரிவில், பிளாட்டினா மற்றும் டிஸ்கவர் 100 என்ற இரு பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு பைக்குகளின் விற்பனையும் அமோகமாகத்தான் உள்ளது. 

     ஆனால், ஹோண்டா நிறுவனத்தின் டிரீம் யுகா பைக் மற்றும் ஹீரோ நிறுவனத்தின், பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்கும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. இவை, 100 சிசி பைக் பிரிவை சேர்ந்தவை. இந்த பிரிவில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு இதனால் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. 

     எனவேதான், பஜாஜ் பாக்ஸர் பிஎம்100 பைக், சோதனை ஓட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பைக் ஏற்கனவே, வளைகுடா நாடுகளிலும், லத்தீன் அமெரிக்கா நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சோதனை ஓட்டம், இந்தியாவில் தற்போது நடந்து வருவதால், இங்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

     இந்தியாவில் ஒரு காலத்தில் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான் இருந்தது. அதில் இருந்து மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு மாறிய போது, பாக்ஸர் 100 சிசி பைக் தான், அதன் முதல் பைக் விற்பனையாக இருந்தது. மீண்டும் அதே பாக்ஸர் 100 சிசி பைக் விற்பனையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் துவக்க உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியே.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக