வெள்ளி, 1 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 6


கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம் 
6. விபூதி இயல்


142. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?
       
       விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.


143. விபூதியாவது யாது?
       
       பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய 
திருநீறு, விபூதியின் பெயர் : பசிதம், பசுமம், க்ஷரம், இரக்ஷ.

144. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
       
     வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

145. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?
       
     புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல் வேண்டும்.


146. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
       
     பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.

147. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?         
       
        வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.


148. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
       
    நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம்.  வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது.  ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

149. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
        
       சிந்திய விபூதியை எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.                           
        
150. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?
       
        சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும் வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.


151. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்? 
         
         சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீக்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.  


152. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?
       
       சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.

153. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?
       
      மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

154. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?
     
    ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீக்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.

155. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
       
        முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

156. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?
       
      கொண்டு வந்தவர் தீக்ஷ முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.

157. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?
       
       உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
       ( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)

158. திரிபுண்டரமாவது யாது?
       
       முக்குறித் தொகுதி.

159. திரிபுண்டரம் எப்படி தரித்தல் வேண்டும்?

    வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.

160. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
       
       சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம். இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.

161. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

     ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.

162. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?
      
      தீக்ஷயுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத்தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும். தீக்ஷ இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.

163. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?


   ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.


திருச்சிற்றம்பலம்.                        நன்றி : சிவநெறி 














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக