செவ்வாய், 19 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 5

கோள்கள் :

     இந்திய ஜோதிடவியல் வரலாற்றின்படி முதலில் கோள்கள் ஏழு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. இராமாயணத்தில் இராமன் பிறந்ததைக் கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமன் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும், குருபகவான் சந்திரனுடன் சேர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு, சைத்ர மாதம் என்றும் சொல்லப்பட்டதையும் எடுத்துக் கொண்டால் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருந்திருத்தலை அறியலாம். சூரியனுக்கு அருகிலேயே புதனும், சுக்கிரனும் காணப்படுவர் என்பது விதியாதலால் மேஷராசிக்கு அருகில் மீனராசியில் உச்சமாக இருக்கக் கூடிய கோள் சுக்கிரன் ஆகும். எனவே இரண்டு கோள்கள் உச்சமாக இருத்தலை (சூரியன், சுக்கிரன்) ஊகிக்கலாம். புதன் உச்சமாக இருக்க முடியாது. மீனராசிக்கு ஏழாவது இராசியாகிய கன்னியில்தான் புதன் உச்சமாக இருக்க முடியும். ஆனால் சூரியனுக்கு அருகிலேயெ சஞசரிக்கும் புதன் சூரியனை விட்டு அவ்வளவு தொலைவில் இருக்க முடியாது. எனவே புதனைத் தவிர ஏனைய கோள்களே உச்சமாக இருக்க முடியும். இராமன் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் எனும் புனர்வசு நட்சத்திரம் என்று வால்மீகி கூறுகிறார்.

     புனர்பூச நட்சத்திரம் என்பதால் சந்திரன் மிதுனராசியிலோ அல்லது கடக ராசியிலோதான் இருக்க முடியும். சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷபராசியானதால் சந்திரன் மிதுனம் அல்லது கடகத்தில் இருப்பதால் சந்திரன் உச்சமாக இருக்க முடியாது. எனவே புதன் மற்றும் சந்திரனைத்தவிர ஏனைய ஐந்து கோள்களே உச்சமாக இருந்திருக்கமுடியும். சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய இந்த ஐந்து கோள்களே இராமன் பிறந்த நேரத்தில் உச்சத்தில் இருந்ததை இதன் மூலம் அறியலாம். எனவே, இராமாயண காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனியாகிய ஏழு கோள்களே வழக்கில் இருந்திருத்தல் கூடும்.

     கோள் எனும் சொல்லுக்கு வடமொழியில் 'க்ரஹம்' எனறு பெயர். 'க்ரஹம்' என்றால் பிடித்தல் என்று பொருள். எடுத்துக்காட்டாக 'சூரிய கிரஹணம்' என்பதற்கு சூரியன் பிடிபடுதல் அல்லது பிடிக்கப்படுதல் என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறே 'பாணிக்ரஹணம்' என்று திருமணத்திற்கு பெயர். பாணிக்ரஹணம் என்பதற்கு கையைப் பிடித்தல் என்று பொருள். ஒவ்வொருவரின் முன்வினைக்கேற்ப நற்பலன்களை அல்லது தீய பலன்களைத் துய்க்கச் செய்வதற்காக இவைகள் அவர்களைப் பிடிக்கின்றன எனும் பொருள்படும்படி ''கிரகம்'' என்று பெயரிட்டனர். மேற்கூறப்பட்ட ஏழு கோள்களுடன் பிற்காலத்தில் நிழற்கோள்களான இராகுவையும் மற்றும் கேதுவையும் சேர்த்து ஒன்பது கோள்களாகக் கொண்டு பலன்கள் கூறத் தலைப்பட்டனர். இதையே வடமொழியில் 'நவகிரஹம்' என்று போற்றுகின்றனர்.

சூரியன்

     ஒன்பது கோள்களுள் முதன்மையானவர் சூரியன் ஆவார். இவர் ஒளிகளுக் கெல்லாம் தலைவன் ஆவார். ஆதிகாவியமான இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தில் விண்மீன்களுக்கும் கோள்களுக்கும், நாள்களுக்கும் தலைவன் என்று கொண்டாடப்படுகிறார்.

     சூரியன் பூமியிலிருந்து சுமார் 9,20,30,000 மைல்கள் தூரத்தில் உள்ளது. இதன் குறுக்களவு சுமார் 8,70,000 மைல்கள் ஆகும். இதன் கனஅளவு பூமியைப்போல் 13,00,000 மடங்குகளாகும். சூரியன் வான மண்டலத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. சூரியன் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு சுமார் ஒரு மாத காலமாகிறது. 12 இராசிகளையும் 365 நாள் 15 நாழிகை 32 வினாடிகளில் சுற்றி வருகிறது.

சூரியனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :

     அண்டயோனி, அருக்கன், அலரி, அழலவன், அனலி, ஆதவன், ஆதித்தன், இரவி, உதயம், ஏல், ஏழ்பரியோன், கதிரவன், சண்டன், சித்திரபாநு, சுடரோன், செங்கதிரோன், சோதி, ஞாயிறு, திவாகரன், தினகரன், தினமணி, பகலோன், பரிதி, பார்க்கவன், பானு, மார்த்தாண்டன், விண்மணி, வெஞ்சுடர், வெய்யோன்.

ஜோதிடவியலில் கோள்                       சூரியனின் தன்மை


 1.  நிறம்                                               -        சிவப்பு

 2.  குணம்                                            -        # தாமஸம் - குரூரன்

 3.  மலர்                                               -        செந்தாமரை

 4.  இரத்தினம்                                      -        மாணிக்கம்

 5.  சமித்து                                            -        எருக்கு 

 6.  தேசம்                                             -        * கலிங்கம்

 7.  தேவதை                                        -        * அக்னி, சிவன் 

 8.  பிரத்யதிதேவதை                          -        * ருத்ரன்

 9.  திக்கு                                               -        நடு  

10.  ஆசனவடிவம்                                      வட்டவடிவம்

11.  வாகனம்                                        -        # தேர், மயில் 

12.  தானியம்                                              கோதுமை

13.  உலோகம்                                             தாமிரம்

14.  பிணி                                                     பித்தம்

15.  சுவை                                             -        காரம்

16.  நட்புக்கோள்கள்                            -        சந்திரன், செவ்வாய், குரு

17.  பகைக்கோள்கள்                           -        சுக்கிரன், சனி, இராகு, கேது


18.  சமமான கோள்கள்                       -        புதன்

19.  கோளின காரகம்                          -        தந்தை, சரீரம் #

20.  கோளின ஆட்சி வீடு                    -        சிம்மம்

21.  கோளின மூலத்திரிகோண வீடு -        சிம்மம்

22.  கோளின உச்ச வீடு                      -        மேஷம்


23.  கோளின நீச வீடு                         -        துலாம்


24.  கோளின உறுப்பு                          -        மார்பு



25.  கோளின நட்சத்திரங்கள்             -        கார்த்திகை, உத்திரம், உத்திராடம்  

26.  கோளின தசை ஆண்டுகள்         -        ஆறு ஆண்டுகள் 

27.  கோளின பாலினம்                      -        ஆண்

28.  கோள் இராசியில்  
       சஞ்சரிக்கும் காலம்                    -        ஒரு மாத காலம் 

29.  கோளின உருவம்                       -        நடுத்தரம்     

30.  கோளின உபக்கிரகம்                  -        காலன் 

31.  சேத்திரம் 
                                    -        ஆடுதுறை 

( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
# குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)

மற்ற கோள்களைப் பற்றி நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.    
.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக